Friday, March 9, 2012

அனுபவித்தது -கண்ணதாசன்

ஒரு தீவிர பக்தனுக்கு அவன் வேண்டுகோளின்படி இறைவன் கருணை புரிந்து காட்சி அளித்தான்…..

இருவருக்கும் கீழ்கண்டவாறு உரையாடல் நடந்தது .............
பக்தன்: பிறப்பின் வருவது யாதென கேட்டான்
இறைவன் : பிறந்து பாரேன இறைவன் பணித்தான்

ப : படிப்பெனச் சொல்வது யாதென கேட்டான்
இ : படித்துப் பாரேன இறைவன் பணித்தான்

அறிவெனச் சொல்வது யாதென கேட்டான்
அறிந்து பாரேன இறைவன் பணித்தான்

அன்பெனப் படுவது என்ன என்று கேட்டான்
பிறருக்கு அளித்துப் பாரேன இறைவன் பணித்தான்

பாசம் என்பது யாதென கேட்டான்
பகிர்ந்து பாரேன இறைவன் பணித்தான்

மனைவியின் சுகம் என்பது யாதென கேட்டான்
மணந்து பாரேன இறைவன் பணித்தான்

பிள்ளைபேறு என்பது யாதென கேட்டான்
பெற்றுப் பாரேன இறைவன் பணித்தான்

முதுமை என்பது யாதென கேட்டான்
முதிர்ந்து பாரேன இறைவன் பணித்தான்

வறுமை என்பது என்னவென்று கேட்டான்
வாடிப்பாரென இறைவன் பணித்தான்

இறப்பின் பின்பு என்னவென்று கேட்டான்
இறந்து பாரேன இறைவன் பணித்தான்

கேட்டவன் கொஞ்சம் கொஞ்சமாக கடுப்பாகி ......இதெல்லாம் சரிதான் ...
எல்லாவற்றையும் நான் அனுபவித்தேதான் அறிவது என் வாழ்கை என்றால்
ஆண்டவனே நீ எதற்கு என்று கேட்டான்…

ஆண்டவன் சற்றே அருகில் வந்து ...
அனுபவம் என்பதே நான்தான் என்றான் ...............

~ கண்ணதாசன் கவிதையிலிருந்து அனுபவித்தது ~

0 comments: